ரூ.47.5 கோடி செலவில் நவீனமாகிறது தமிழக காவல்துறை – ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக 47 கோடியே 49 லட்சம் ரூபாயை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காவல் நிலையங்களுக்கான கட்டடம் கட்டுதல், காவல்துறையினருக்கு வீடுகள் கட்டுதல், வாகனங்கள் வாங்குதல், நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்தல், பயிற்சி, தொடர்பு வசதி தடய அறிவியல் துறைக்கான நவீன உபகரணங்கள் வாங்குதல் ஆகிய காவல்துறை நவீனமயமாக்கல் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ 47 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
47 கோடியே 49 லட்சம்
காவல் நிலையங்களுக்கான கட்டடங்கள் கட்ட 15 கோடியே 51 லட்சம் ரூபாய், காவலர் வீடுகள் கட்ட 5 கோடியே 6 லட்சம் ரூபாய், வாகனங்களுக்கென 9 கோடியே 38 லட்சம் ரூபாய், தொடர்பு வசதிக்கென 23 லட்சம் ரூபாய், பயிற்சிக்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய், உபகரணங்கள் கொள்முதல் செய்ய 14 கோடியே 60 லட்சம் ரூபாய், தடய அறிவியல்,ஊர்க்காவல் படை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளுக்கு 1 கோடியே 51 லட்சம் ரூபாய் என மொத்தம் 47 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications