திமுகவினர் வீட்டில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று: துரைமுருகன் பேட்டி
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசார் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் துரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 31.3.2006 முதல் 31.03.2009 வரையிலான காலகட்டத்தில் துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து துரைமுருகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று துரைமுருகனின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள மசாலா ஏற்றுமதி தொழிற்சாலை, ஏலகிரியில் உள்ள பண்ணை வீடு, பொறியியல் கல்லூரி, சிகரெட் நிறுவன குடோன் ஆகியவை உள்பட 12 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து 8 மணி நேரம் தீவிர சோதனை நடந்தது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் இணை இயக்குனர் குணசீலன், துணை இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் கண்காணிப்பாளர் துரைக்குமார் தலைமையில் 9 டி.எஸ்.பி.க்கள்,11 இன்ஸ்பெக்டர்கள் 60 போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அவரது வீட்டுக்கு டி.எஸ்.பி. முரளி தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனை குறித்து தகவல் அறிந்த திமுகவினர் துரைமுருகன் வீட்டுக்கு முன்பு கூடிவிட்டனர்.
அடையாறு காந்திநகர் அடுக்குமாடி குடியிருப்பில் துரைமுருகனுக்கு 3 வீடுகள் உள்ளன. அதில் 1 வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். மற்ற 2 வீடுகள் இந்த 3 வீடுகளிலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை சோதனை நடந்தது.
இந்த சோதனைகள் குறித்து துரைமுருகன் கூறியதாவது,
திமுகவினர் வீடுகளில் இது போன்ற சோதனைகள் நடப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தற்போதும் அது தான் நடந்துள்ளது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றார்.