உத்தர பிரதேசத்தில் வால்மார்ட்டை அனுமதிக்கமாட்டோம்!– மாயாவதி உறுதி
லக்னோ: ராகுல் காந்தியின் நண்பர்களை வளப்படுத்தவே சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
எக்காரணத்தைக் கொண்டும் வெளிநாட்டு நிறுவனங்களை உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைய விடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு போதும் வெளிநாட்டுக் கடைகளை அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
காங்கிரசின் விடி வெள்ளி என்று கூறிக்கொள்ளும் ராகுல் காந்தியின் தந்திரம் இது. அவரது நண்பர்களின் வருமானத்தை பெருக்கத்தான் இது உதவும்.
சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்தால், பல கோடி சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இந்தியா அடிமைப்பட்டதை போன்ற முயற்சிதான் இது. உத்தரபிரதேசத்தில் ஒரு போதும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது.
அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை திரும்பப்பெறாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய அவர், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் கைகளில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்றார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் மாயாவதி கூறினார்.
தனது கட்சி எம்.பிக்கள் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.