வால்மார்ட் ஸ்டோரை தீயிட்டு கொளுத்துவேன்; உமா பாரதி சபதம்
லக்னெள: நாட்டில் எந்தப் பகுதியில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவன தனது சூப்பர் மார்க்கெட்டை திறந்தாலும் அதை என் கையாலேயே தீயிட்டுக் கொளுத்துவேன் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கூறியுள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் இந்தியா முழுவதும் உள்ள சிறு வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது வர்த்தகர்களின் அச்சம். எனவே சில்லரை வணிகத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்க பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று, நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு பிராண்டு பொருட்கள் என்றால், 51 சதவீத அன்னிய மூலதன முதலீடும். தனிக்கம்பெனி ஒன்றின் பிராண்ட் என்றால், 100 சதவீத அன்னிய முதலீடும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கேபினட் செயலாளர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
முடங்கிய அவைகள்
மத்திய அரசின் இந்த முடிவு வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தன. எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 4-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின. இதனால் இரு சபைகளும் 28-ந் தேதிவரை ஒத்தி வைக்கப் பட்டன. இருப்பினும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைக் கண்டித்து, 28-ந் தேதி பாராளுமன்றத்தில் பா.ஜனதா தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து சில்லறை வணிகத்தில் ஈடுபட முயன்றால் அந்த கடைகளை தன்கையாலேயே கொளுத்துவேன் என்று பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
உமா பாரதியின் இந்த ஆக்ரோஷமான அறிவிப்பு குறித்து பாஜக தலைமை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
தங்கள் கட்சி ஒரு போதும் வன்முறையை ஆதரித்தது கிடையாது என்றும் உமா பாரதி தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகளே தவிர, கட்சியின் நிலை அல்ல என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
சமாளிக்க திட்டம்
இந்த நிலையில் அந்நிய நேரடி முதலீடு பிரச்சினையில் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து புது டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications