மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற பெண் போலீசாரிடம் ஒப்படைப்பு
சென்னை: திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் தவித்த பெண், மருத்துவமனையில் நர்ஸ் போல நடித்து பிறந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்ற போது மருத்துவமனை ஊழியர்களிடம் பிடிப்பட்டார்.
சென்னை பழைய வண்ணாரப்போட்டையை அடுத்த ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். கூலித் தொழிலாளரான இவருக்கு ஜனனி (23) என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருந்த ஜனனிக்கு கடந்த 22ம் தேதி, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையி்ல் ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் முடிந்து மருத்துவமனையில் தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ஜனனியின் வார்டுக்கு வந்த நர்சு பெண் ஒருவர் தடுப்பூசிப் போட வேண்டும் என்று கூறி ஜனனியின் குழந்தையை எடுத்து சென்றார். அந்த பெண் குழந்தையுடன் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல முயன்ற போது மருத்துவமனை வாசலில் இருந்த காலவர் 'டிஸ்சார்ஜ்' சீட்டை கேட்டார்.
அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அந்த பெண்ணை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண் ராயபுரத்தை அடுத்த சூரிய நாராயண தெருவை சேர்ந்த கந்தவேலு என்பவரின் மனைவி அனுசுயா என்பதும், திருமணமாகி 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் மருத்துவமனையி்ல் புகுந்த நர்சாக நடித்து குழந்தையை எடுத்து செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து ராயபுரம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications