சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு
டெல்லி: சில்லறை வணிகத்தில் 51 சதவிகித நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிப்பது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு 51 சதவிகிதம் அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து அதற்கான அறிவிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த முடிவுக்கு பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களான உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி அன்னிய முதலீட்டு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு
ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அன்னிய முதலீட்டுக்கு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார். அதேபோல் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியும் இது பொருளாதார சுனாமி என்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இரு அவைகளும் ஒத்திவைப்பு
அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதால் அவை மொத்தமாக முடங்கியுள்ளது.
இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்துள்ளார். நாளை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான கடிதத்தை அனைத்து கட்சியினருக்கும் மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் அனந்த் சர்மா அனுப்பியுள்ளார்.