பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சி.பி.எம். பேராட்டம்: டிசம்பர் 5ம் தேதிக்கு மாற்றம்
மதுரை: தமிழக அரசு அறிவித்த பால்விலை, பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு 28.11.2011 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டம் 5.12.2011க்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகம் முழுவதும் பரவலாகப் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழை காரணமாகவும், வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பால்விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உத்தேச மின்கட்டண உயர்வைக் கண்டித்தும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு 28.11.2011 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டம் 5.12.2011 அன்றுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாவட்டக் குழுக்களும், அணிகளும் டிசம்பர் 5ம் தேதி மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிடுமாறும், இப்போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தருமாறும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.