விமானதளத்தை 15 நாட்களுக்குள் யு.எஸ். காலி செய்ய வேண்டும்: மேலும் 'டைம்' கொடுக்க சர்தாரி மறுப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க்காவின் சிஐஏ, ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை ட்ரோன் ஏவுகணைகளை வீசித் தாக்க பயன்படுத்தி வரும், ஷம்சி விமானதளத்தை காலி செய்ய பாகிஸ்தான் அரசு கொடுத்துள்ள 15 நாள் கெடுவை நீட்டிக்க அநநாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மறுத்துவிட்டார்.
சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும் இதனால் பெரும் கடுப்பாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைத்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத்தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் திடீர் என்று நேற்று பாகிஸ்தான் வந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் சர்தார் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷம்சி விமானதளத்தை காலி செய்ய அமெரிக்காவுக்கு அளித்துள்ள 15 நாள் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சர்தாரி மறுத்து விட்டார்.
நஹ்யானுடனான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ஷம்சி விமானதளத்தை காலி செய்வது பற்றி குறிப்பிடவில்லை.
பாகிஸ்தான் அரசு கடந்த 1992ம் ஆண்டு ஷம்சி விமானதளத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் பரம்பரையினருக்கு லீசுக்கு விட்டது. 9/11 தாக்குதல் நடந்ததில் இருந்து அந்த விமானதளத்தை அமெரிக்கா பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்தது.
இந்த சந்திப்பின் போது நஹ்யான் 15 நாள் கெடுவை நீட்டிக்குமாறு சர்தாரியை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியும் அவர் மசியவில்லை என்று கூறப்படுகின்றது.