கேரளாவின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை- ராஜ்யசபாவில் சிபிஐ, சிபிஎம் குற்றச்சாட்டு
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று சிறப்பு விவாதம் நடந்தது. அதில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.
அதிமுக தலைவர் மைத்ரேயன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை விட பழமையான அணைகள் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. தமிழகத்திலேயே கரிகால் சோழன் கட்டிய கல்லணை 1900 ஆண்டுகள் பழமையானது. இன்னும் அது சிறப்பாக, எந்தப் பிரச்சினையும் இன்றி இயங்கி வருகிறது.
கல்லணை கட்டப் பயன்படுத்தப்பட்ட அதே முறையில்தான், அதே சுண்ணாம்புக் கல் கலவையில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. எனவே அணை பலவீனமாக இருப்பதாக கேரளா கூறுவதை ஏற்க முடியாது.
கேரள மாநில அட்வகேட் ஜெனரலும் கூட அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் கூட அதிலிருந்து வரும் தண்ணீரை இடுக்கி அணை, புலமாவு அணை உள்ளிட்ட நான்கு அணைகள் தாங்கிக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். இது கேரளாவின் ஒப்புதல் வாக்குமூலமாகவே கருத வேண்டும் என்றார்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், தமிழர்களின் உரிமையைகைக் காக்க, தமிழகத்தின் நலனைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.
சிபிஐ உறுப்பினர் ராஜாவும், சிபிஎம் உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் பேசுகையில் எல்லைப் பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத் தடுக்காமல் கை கட்டிமத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய செயல். உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, பிரதமர் தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
இதேபோல காங்கிரஸ் சார்பில் கேரளாவைச் சேர்ந்த எம்.பி. குரியன் பேசினார். அவர் பேசுகையில் மைத்ரேயன் குறுக்கிட்டதால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.