முல்லை பெரியாறு தொடர்பான எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது - கேரள டிஜிபி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக இனி எந்த போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று கேரள டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக குமுளி எல்லையில் கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது தமிழக வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தினால் தமிழக - கேரள எல்லையில் பதற்றம் நிலவுகிறது
இந்நிலையி்ல் கேரள டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் புதன்கிழமையன்று முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டார். தமிழக கேரள எல்லை பகுதியில் பாதுகாப்பை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
குமுளியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. தற்போது கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை சாவடியில இனி மேல் எந்த வாகனமும் தடுத்து நிறுத்தப்பட மாட்டாது. கேரளாவுக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எந்த சிரமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் அச்சமின்றி சபரிமலைக்கு வந்து செல்லலாம். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இனிமேல் எந்த போராட்டத்துக்கு்ம் அனுமதி இல்லை என்றார்.
அணையை சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தவித்து வரும் மலையாளிகளை பாதுகாப்பாக கேரளாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபியிடம் உதவி கோரப்பட்டுள்ளத என்றார்.