குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தண்டித்துக் கொள்வேன்: ஸ்டாலின்
அண்ணா பொது நூலக மன்றம் சார்பில் வடபழனியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
அதிமுக அரசு தொடர்ந்துள்ள நில அரகரிப்பு வழக்கில் எனது மகன் உதயநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் நான் முன்ஜாமீன் கோர மாட்டேன். அவர்கள் என்னை கைது செய்யட்டும் என்று தான் இருக்கிறேன்.
யாரோ ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார், இவர்களும் அது உண்மையா இல்லையா என்று கூட பார்க்காமல் எங்கள் மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளனர். என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்ததுமே நான் நேராக டிஜிபி அலுவலகத்திற்கு சென்று என்னை கைது செய்யுங்கள் என்றேன். ஆனால் அங்கிருந்த கூடுதல் டிஜிபி தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாரே தவிர பதில் எதுவும் பேசவில்லை.
கனிமொழி வருகையால் எனக்கு முக்கியத்துவம் குறைந்ததாகவும், அதனால் அதை நிலைநிறுத்தவே நான் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று என்னை கைது செய்யுமாறு கூறியதாகவும் சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி அறிவிக்கைவிட்டார். அதற்கு பதில் அறிக்கைவிட்ட நான் என் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று கேட்டிருந்தேன். இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என் மீது வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்த உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் பதிவு செய்தார்கள். என் மீது சுமதப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் நானே எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். அவர்கள் 5 ஆண்டு ஆட்சி முடியும் வரை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
நில அபகரிப்பு வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் என்னை தண்டிக்க வேண்டாம். நானே என்னை தண்டித்துக் கொள்வேன். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அரசு அதிகாரிகள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளார்களா?
வடபழனியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை இன்று நான் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் போலீசார் திடீர் என்று சிலையைத் திறக்க அனுமதியில்லை என்று கூறிவிட்டனர். அண்ணா சிலையைத் திறக்க அனுமதி அளிக்காதவர்கள் தான் தங்கள் கட்சி பெயரில் அண்ணா பெயரை வைத்துள்ளனர் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மாணவர்கள் மத்தியில் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையி்ல் 3,000 மாணவர்கள் பெயரில் ரூ.100 வீதம் ரூ.3 லட்சம் அண்ணா பொது நூலக மன்றம் சார்பில் வங்கி சேமிப்புக் கணக்கு திறந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வங்கிப் புத்தகத்தை மாணவ, மாணவியரிடம் ஸ்டாலின் வழங்கினார்.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகத்தில் 2,000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இது தவிர திமுக இளைஞர் அணி சார்பில் ரூ.1 லட்சத்திற்குப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்சென்னை மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், அண்ணா பொது நூலக மன்றத்தின் பொருளாளரும் முன்னாள் மேயருமான சா.கணேசன், மன்றத் தலைவர் செ.கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் தலைமை தாங்கினார்.