446.84 கோடியில் புதிய போலீஸ் குடியிருப்புகள் – ஜெ. ஆணை
சென்னை: தமிழக போலீசாருக்காக 446.84 கோடி ரூபாயில் புதிதாக 5440 குடியிருப்புகள் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், போலீசாருக்கான காப்பிட்டு தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தற்போது மொத்தம் ஒப்பளிக்கப்பட்டுள்ள 1,09,525 காவல் பணியாளர்களில் 47,520 பணியாளர்களுக்கு மட்டுமே குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும், 5,319 குடியிருப்புகள் தற்போது கட்டப்பட்டு வருவதையும் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்த ஆண்டு 446 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மேலும் 5,440 குடியிருப்புகள் கட்ட உத்தரவிட்டுள்ளார். பணியாளர்களுக்கான குடியிருப்புகள்
மேற்படி 5,440 குடியிருப்புகளில், 158 கோடியே 88 லட்சத்தில், 2,000 குடியிருப்புகள் கட்டுவதற்கான ஆணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.தற்போது மீதமுள்ள 3,440 குடியிருப்புகளை 287 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதன்படி 11 ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகளும், 21 சார் ஆய்வாளருக்கான குடியிருப்புகளும், 3,408 தலைமை காவலர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பபடும். இந்த நடவடிக்கைகள் மூலம் காவல் துறை பணியாளர்களுக்கான குடியிருப்புத் தேவைகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும்.
காப்பீட்டு தொகை உயர்வு
இதே போன்று, காவலர் பணியில் உள்ள ஆபத்தினைக் கருத்தில் கொண்டு காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் நிலை வரை உள்ள காவல்துறை பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழக்க ஏற்பட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் காப்பீட்டுத் தொகையினை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.