ஊடுறுவும் 'ட்ரோன்'களை சுட்டு வீழ்த்துவோம்- அமெரிக்காவிற்கு பாக். ராணுவம் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – அமெரிக்கா இடையேயான மோதலின் உச்சகட்டமாக பாக் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு மற்றும் தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) சுட்டு வீழ்த்துவோம் பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி.தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த, அமெரிக்காவுக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பரஸ்பர நம்பிக்கை
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, திட்டமிட்டே நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என குற்றம்சாட்டிய கிலானி, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார். நேட்டோ படையின் வாகனங்கள், தமது நாட்டுக்குள் நுழைய, தடை விதிக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய ராணுவக்கொள்கை
இதனிடையே பாகிஸ்தான் அரசு புதிய ராணுவ கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம். என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.