கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்க கோரி ஈரோட்டில் சிறுகுறு தொழிற்சாலைகள் ஸ்டிரைக்
ஈரோடு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தின.
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையினால் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் குறுந்தொழில்கள்தான். தினசரி அறிவிக்கப்பட்ட மின்தடை மற்றும் அறிவிக்கப்பட்ட மின்தடை மற்றும் அறிவிக்கப்படாத மின்தடையினால் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டர்களை முடித்து கொடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது என்பது சிறு மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்களின் ஆதங்கம்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படத் தொடங்கினால் தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையை சமாளிக்கலாம் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் அணு உலைக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அணுமின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படுவது தாமதமடைந்து வருகிறது. எனவே அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தாயிரம் தொழிற்சாலைகள்
இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் சாயத் தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் தொழிற்சாலைகயின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே தமிழகத்தில் மின்பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் மின்சார விடுப்பு வழங்குமாறும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, சுமார் பத்தாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் இருபது கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.