முல்லைப் பெரியாறு பிரச்சனையை தீர்க்கக்கோரி வேன் டிரைவர் தீக்குளிப்பு: தேனியில் பரபரப்பு
தேனி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தேனியில் வேன் டிரைவர் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேனியில் கடைகள் அடைக்கப்பட்டன.
மதுரை சாலை சுந்தரம் சேர்வை லைன் பகுதியில் வசித்தவர் சண்முக சுந்தரம். அவருடைய மனைவி சண்முகத்தாய். அவர்களுக்கு சீனிவாசன், சரவணன், பாலு, ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31) என்ற 4 மகன்களும், வசந்தி, சாந்தி, சந்திரா என்ற 3 மகள்களும் உள்ளனர்.
சண்முகசுந்தரம் இப்போது உயிருடன் இல்லை. மேலும் சமீபத்தில் பாலுவும் இறந்துவிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. இதனால் ஜெயப்பிரகாஷ் தனது தாயுடன் வசித்து வந்தார். தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தேனி நேரு சிலை உள்ள இடத்திற்கு வந்தார். தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனைத் திறந்து அதில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்தார். அவரது உடலில் தீப்பிடித்தவுடன் வேதனை தாங்காமல் அலறினார்.
அவரது அலறல் சத்திம் கேட்டு வந்த தேனி நகர போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தான் தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் தேனி முழுவதும் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக உண்ணாவிரத போராட்டம் முடிவு பெறும் நேரமானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அனைத்து பேருந்துகளையும் தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு திருப்பிவிட்டனர். பேருந்துகளில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதைப் பார்த்த தேனி பேருந்து நிலைய பகுதி மற்றும் மதுரை சாலை கடைக்காரர்கள் உடனே கடைகளை அடைத்துவிட்டனர். மேலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகே தேனியில் இயல்பு நிலை திரும்பியது. மாலை 6 மணி அளவில் பேருந்துகள் தேனி நகர பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு வழக்கம் போல் இயங்கின. அதன் பிறகு கடைகளும் திறக்கப்பட்டன.