காலாவதியான பூஞ்சை பிடித்த பேரீச்சம்பழத்தில் எண்ணெய் தடவி விற்க முயற்சி- குடோனுக்கு சீல்
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கலாவதியான 2 டன் பேரிச்சம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் உடனடியாக அந்த குடோனுக்கு சீல்வைக்கப் பட்டது.
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியில் போலி பேரிச்சம்பழங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுபாட்டு அலுவலர் டாக்டர் ஜெகதிஸ் சந்திரபோஸ் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள குடோனில் பூஞ்சை படர்ந்து தூர்நாற்றம் விசும் பேரிச்சம்பழங்கள் மீது தேங்காய் எண்ணெய் தடவி பாலிஷ் செய்து போலி லேபிள் வைத்து பெண் தொழிலாளர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்ததில் அவை காலாவதியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குடோனுக்கு சீல்
இதையடுத்து அங்கிருந்த சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 2 டன் பேரிச்சம்பழம் மூட்டைகள் அழிக்க உத்தரவிடப்பட்டது. பேரிச்சம்பழங்களில் படர்ந்துள்ள பூஞ்சைகளை மறைப்பதற்காக தரமற்ற தேங்காய் எண்ணெய் தடவி விற்பதால் அவற்றை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிறு, குடல் சம்பந்தமான நோய்கள் வரும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications