முல்லைப் பெரியாறு: கோவையில் ஆட்டோ ஸ்டிரைக்
கோவை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் நிலைபாட்டைக் கண்டித்து இன்று கோவையில் ஆட்டோ ஸ்டிரைக் நடக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக மக்களை ஒன்று சேர்த்துள்ளது. அவர்கள் எந்த அரசியல் கட்சிகளின் தூண்டுதலும் இல்லாமல் தாங்களாகவே தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையால் பயனடையும் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. மேலும் இந்த 5 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளும் மூடப்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாட்டைக் கண்டித்து இன்று கோவையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்து வருகிறது. இதனால் தெருக்கள் ஆட்டோக்கள் ஓடாமல் வெறிச்சோடி உள்ளன. மக்கள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரள அரசுக்கு துணைபோவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.