முல்லைப் பெரியாறு பிரச்சனை: பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுக்கிறார் கருணாநிதி
சென்னை: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த கோரி சென்னைக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளிக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர். தி.மு.க தலைவர் மு. கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்திக்கும் அவர்கள் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்த உள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக வின் தேனி மாவட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர். அப்போது அந்தப் பகுதியில் நிலவி வரும் பிரச்சினை குறித்தும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தி.மு.க. சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களிடம் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கேரள எல்லைப் பகுதியில் நடைபெறும் கலவரங்கள் குறித்தும் அந்த பகுதி மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்தும், தேனி மாவட்ட நிர்வாகிகள் விவரித்தனர்.
பிரதமரிடம் மனு
வரும் 26ம் தேதி திங்கட்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வரும்போது, அவரை நேரில் சந்தித்து கேரள எல்லை பகுதியில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்யாமல், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை 142 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், தலைமைக்கழக முதன்மை செயலாளர் ஆற்காடு வீரசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.