காவல் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு: எஸ்.ஐ உட்பட 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமாக இறந்த விவகாரத்தில் எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் தேவுசந்திரபாபு(25). பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி ஏனாம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் காவல் நிலையத்தில் திடீர் என்று விஷம் குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து தேவுசந்திரபாபு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தேவுசந்திரபாபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி தேவுசந்திரகலா புதுவை ஆளுநர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமி, போலீஸ் உயரதிகாரிகளிடம் மனு அளித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் திடீர் திருப்பமாக தேவுசந்திரபாபுவின் தற்கொலை வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அவரை சட்டத்துக்கு புறம்பாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்ததால் இறந்ததாகவும், போலீசார் தடயங்களை மறைத்ததாகவும் கூறி ஏனாம் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சந்திரநாராயணன், 3 காவலர்கள் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.