கேரளாவைக் கண்டித்து பெட்ரோலுடன் மதுரை கோர்ட் உச்சியில் 10 வக்கீல்கள் போராட்டம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமானப்படுத்தி வரும் கேரள அரசைக் கண்டித்து மதுரை ஒருங்கிணைந்த கோர்ட் கட்டட உச்சியில் பெட்ரோல் பாட்டிலுடன் 10 வக்கீல்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மெயின் பில்டிங்கின் உச்சிக்கு பத்து வக்கீல்கள் இன்று முற்பகலில் பெட்ரோல் பாட்டில்களுடன் ஏறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு நின்றபடி கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதை உதாசீனப்படுத்தி அவமதித்து வருகிறது. இதைக் கண்டித்து நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று கூறினர்.
இதையடுத்து மாவட்ட தலைமை நீதிபதி விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து தங்களுடன் பேச வேண்டும் என்று கோரியபடி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications