தன்னுயிர் நீத்து 3 தமிழர் உயிர் காக்கப் போராட்டம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டையை நிறைவேற்ற இந்த ஆண்டு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஆர்த்தெழுந்த தமிழர் பட்டாளம் தனது பெரும் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த தேதியை தள்ளிப் போட வைத்துள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதி இந்த மூன்று பேரும் தாக்கல் செய்திருந்த கருணை மனு நிராகரிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்தது. இதையடுத்து அவர்களைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. வரலாறு காணாத வகையில் இந்தப் போராட்டங்களின் துக்க உச்சமாக காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம் தளிர் ஆகஸ்ட் 27ம்தேதி தீக்குளித்து உயிர் நீத்து உலகத் தமிழர்களை துக்கத்தில் மூழ்கச் செய்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெடித்த இந்தப் போராட்டத்தின் பின்னணியில், சென்னை உயர்நீதிமன்றம், மூன்று தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.
தமிழக சட்டசபையிலும், முதல்வர் ஜெயலலிதா மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
ஊசலாடி வரும் இந்த மூன்று தமிழர்களின் வாழ்வைக் காக்க தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தூக்குக் கயிறை தமிழர்கள் வெல்வார்களா அல்லது கயிறு அவர்களை வெல்லுமா. காலம் பதில் சொல்லும்...