சென்னையில் சிறைப் பிடிக்கப்பட்ட தென்கொரிய சரக்கு கப்பல் தரைதட்டியது

தமிழகத்தில் வீசிய 'தானே' புயல் காரணமாக சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் தென்கொரியாவை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் மட்டும் சென்னை துறைமுகத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கப்பல் நீதிமன்ற உத்தரவின் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்ததால், 14 சிப்பந்திகளுடன் நடுகடலுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் 'தானே' புயலில் சிக்கிய அந்த கப்பல், மெரினா கடற்கரை அடுத்தத ஐ.என்.எஸ் அடையார் பின்புறம் தரை தட்டி நின்றது. இது குறித்து தகவல் அறிந்த துறைமுக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தரைத்தட்டி நின்ற கப்பலை மீட்க நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்கொரியா நாட்டில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்வதற்காக ஓ.எஸ்.எம். அரினா சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில் குத்தகை முறையில் கப்பலை பெற்றவர், கப்பல் உரிமையாளர் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து கப்பல் குத்தகைக்காரர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து கொல்கத்தா நீதிமன்றம், கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை துறைமுகம் அருகே கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் கப்பல் உரிமையாளர், கப்பலில் இருந்த 18 சிப்பந்திகளுக்கு சம்பளம் வழங்க சம்மதித்தார்.
கப்பல் சிப்பந்திகளுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் மற்றும் உணவுபடிகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு கப்பல் உரிமையாளர் கண்டு கொள்ளாமல் விட்டதால், சென்னை துறைமுகத்தில் உள்ள ஏஜெண்டுகள் உணவுப் பொருட்களை அனுப்பி வந்தனர்.
பல மாதங்களாக சம்பளமின்றி தவித்த 18 சிப்பந்திகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், 18 சிப்பந்திகளையும் பணிமாற்றம் செய்த கப்பல் உரிமையாளர், புதிதாக பர்மாவை சேர்ந்த 14 சிப்பந்திகளை பணியில் வைத்து சம்பளம் வழங்கி வருகின்றார்.
வழக்கில் சிக்கி தவித்த இந்த கப்பல் தற்போது 'தானே' புயலின் தாக்குதலில் சிக்கி தரை தட்டியுள்ளது, கப்பல் சிப்பந்திகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications