கடல் எல்லை தாண்டியதாக 4 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த 2ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன் பிடித்துவிட்டு 3ம் தேதி காலையில் ஒவ்வொரு படகுகளாக கரை திரும்பிக் கொண்டிருந்தன. 3ம் தேதி இரவு கடலுக்கு சென்ற அனைத்து படகுகள் கரை திரும்பிய நிலையில், போஸ் என்பவரது படகு மட்டும் கரை திரும்பவில்லை.
போஸின் படகில் கோவிந்தன், குமார், நாதன், ஆறுமுகம் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். கரை திரும்பாத போஸின் படகை தேடி, நேற்று காலையில் ஜெயபால் என்பவரது படகில் கண்ணன், செல்வராஜ் உட்பட 4 மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இலங்கை கடல் பகுதியில் கரை திரும்பாத போஸின் படகு தத்தளித்து கொண்டிருந்தது தெரிந்தது. அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் தங்களின் படகு பழுதாகிவிட்டதால் நடுக்கடலில் சிக்கி தவிப்பதாகவும் தங்களை காப்பாற்றுமாறும் கூறினர்.
இதனையடுத்து தேடி சென்ற மீனவர்கள், பழுதடைந்த படகை நோக்கி சென்றனர். அதற்குள் அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதடைந்த படகு தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி படகையும், 4 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர். இது குறித்து மீன்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 4 மீனவர்களும் தலைமன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.