கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்-வைகோ
கடலூர்: தானே புயலின் தாண்டவத்தால் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ள கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்துள்ள பகுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பார்வையிட்டார். காடாம்புலியூர் பகுதியில் புயலால் முற்றிலும் அழிந்துபோன முந்திரி, பலா மரங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
தேசிய பேரிடர் மாவட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புயலால் கீழே விழுந்த மரங்களை அகற்ற போதுமான ஆட்களையும், இயந்திரங்களையும் வழங்கி அரசு உதவ வேண்டும். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ 15 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நிர்வாக காரணங்களை கூறி காலம் தாழ்த்தாமல், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.