சென்னை ஓபன் 2012-இரட்டையர் பட்டத்தை வென்றது லியாண்டர் பயஸ் ஜோடி
சென்னை: சென்னை ஓபன் 2012 இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செர்பியாவின் டிப்சரவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற 17வது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைப்பெற்றது.
இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செர்பியாவின் ஜான்கோ டிப்சரவிக் ஜோடி, இஸ்ரேலின் ஜோனாதான் எல்ரிச், ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான முதல் செட்டில் பயஸ் ஜோடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2வது செட்டிலும் 6-4 புள்ளிகளில் வென்று பட்டத்தை தட்டிச் சென்றது.
ராவோனிச்சுக்கு ஒற்றையர் பட்டம்
இதற்கு முன்னதாக நடந்த ஒற்றையர் பைனலில் கனடா வீரர் மிலோஸ் ராவோனிச், செர்பியாவின் ஜான்கோ டிப்சரவிக் மோதினர். பரபரப்பான ஆட்டத்தில் 6-7, 7-6, 7-6 என்ற கணக்கில் ராவோனிச் வெற்றி பெற்றார். சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த ஒற்றையர் பைனலில் வெற்றிப் பெற்றதன் மூலம் மிலோஸ் ராவோனிச், சென்னை ஓபனை வெல்லும் முதல் கனடா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வெற்றி குறித்து இந்தியாவின் லியண்டர் பயஸ் கூறியதாவது,
ஒரே நாளில் 2 இறுதிப் போட்டிகளில் பங்கேற்க மனதை ஆயத்தப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜான்கோ டிப்சரவிக் 2 இறுதிப் போட்டிகளுக்கும் தனது மனதை தயார்படுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது. ஒரு தடகள வீரரை போல அவர் களத்தில் விளையாடினார், என்றார்.
சென்னை ஓபனில் பயஸ் ஜோடி இதுவரை 6 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், முதல் முறையாக வேறு ஒரு வீரருடன் இணைந்து பயஸ் தற்போது பட்டம் வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications