ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையில் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
டெல்லி: பல பிராண்ட்களை விற்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் (multi-brand retail) 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தத் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந் நிலையில் அடிடாஸ் போன்ற ஒரு பிராண்டை மட்டும் விற்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் (single-brand retail) 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதன்மூலம் அடிடாஸ் போன்ற நிறுவனங்கள் முழுக்க முழுக்க தங்களது முதலீட்டிலேயே இந்தியாவில் கிளைகளைத் தொடங்க முடியும். இதுவரை, இவர்கள் 51 சதவீதம் மட்டுமே முதலீடு செய்ய வழி இருந்தது. மிச்சமுள்ள 49 சதவீதம் இந்திய நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
இப்போது ஒற்றை பிராண்ட் பொருள் கொண்ட நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் அனுமதிக்கப்படும் என தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) அறிவித்துள்ளதால், பிரபல வெளிநாட்டு நிறுவனங்களான அடிடாஸ், லூயி வுயூட்டோன், குச்சி (gucci), ஐகியா ஆகியவை இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை முழு வீச்சில் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அன்னிய முதலீடு 51 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து 30 சதவீத அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதோடு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
ஒற்றை பிராண்ட் சில்லறை வணிகத்தில் 100 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் மல்டி பிராண்ட் சில்லறை வணிகத்திலும் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கட்டாயம் அமல்படுத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications