தமிழகம் கேட்டது ரூ. 5800 கோடி- பிரதமர் ஒதுக்கியது முதல் கட்டமாக ரூ. 500 கோடி!

புயல் நிவாரண நிதியாக ரூ. 5800 கோடி ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
டிசம்பர் 30 ம் தேதி தானே புயல் கரையை கடந்ததில் முற்றிலும் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டமும், புதுச்சேரியும்தான். இதனையடுத்து புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் 9 பேர் அடங்கிய மத்திய ஆய்வு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவையில் ஆய்வு செய்த குழுவினர் திங்கட்கிழமை தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலும், செவ்வாயன்று விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு செய்தனர்.
மூன்று நாள் ஆய்வுக்குப் பிறகு மத்திய குழுவினர் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்தனர். அங்கு வருவாய் முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து சுமார் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினர். டெல்லி சென்றபின்னர் விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தெரிவித்திருந்தார்.
தமிழகத்துக்கு ரூ. 500 கோடி
இதற்கிடையில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.500 கோடியும், புதுவைக்கு ரூ.125 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, இரு மாநில அரசுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து முதல் கட்டமாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டெல்லி சென்று மத்திய குழு
இதற்கிடையே, மத்திய குழு தனது ஆய்வை முடித்துக் கொண்டு இன்று டெல்லி கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications