மகன் வாந்தி எடுத்ததால் முகம் சுளித்த டாக்டர்-அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!
கும்பகோணம்: சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மகன் வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக போய் சுத்தம் செய்து விட்டு வருமாறு டாக்டர் கூறியதால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் டாக்டரை வெட்ட அரிவாளுடன் வந்தார். அதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ், ஆட்டோ டிரைவர். இவர் தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
நேற்று இரவு ஜெயப்பிரகாஷின் மகன் வாந்தி எடுத்துள்ளான். இதையடுத்து அவனை தூக்கிக் கொண்டு போய் சுத்தம் செய்து விட்டு வருமாறு டாக்டர் கூறியுள்ளார். இதனால் ஜெயப்பிரகாஷ் கோபமடைந்தார்.
மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர் நள்ளிரவில் நன்றாக குடித்து விட்டு மருத்துவமனைக்கு வந்தார். கையில் அரிவாளுடன் வந்த அவர் எங்கே டாக்டர் என்று கேட்டு பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த ஊழியர் மணிவேல் ஜெயபிரகாஷைத் தடுக்க முயன்றார். அப்போது மணிவேலுக்கு வெட்டு விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷை மடக்கிப் பிடித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஜெயபிபிரகாஷைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று காலை டாக்டர்களும், ஊழியர்களும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.