புயல் தாக்கிய புதுவையில் 9 பேருக்கு காலரா: சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
புதுச்சேரி: புதுவையில் 9 பேருக்கு காலரா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையில் குடிநீர் மாசு பட்டுள்ளது. தண்ணீரில் கழிவு நீர் கலந்ததால் வாந்தி,பேதி, மயக்கம் ஏற்பட்டு சிலர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கும், ஜிப்மரில் உள்ள 5 பேருக்கும் காலரா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதிப்பு முதலியார்பேட்டை, பூமியான்பேட்டை பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காலரா மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் காய்கறிகளை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து உட்கொள்ள வேண்டும். வாந்தி,பேதி, மயக்கம் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவ உதவி தேவைப்படுவோர் 0413 - 2336991 என்ற எண்ணிலும், அவசர சிகிச்சை வேண்டுவோர் 0413 - 2336050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications