முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு
மதுரை அண்ணா நகர் வண்டியூர் மெயின்ரோட்டில் நித்யானந்தா தியாக பீடம் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை ஆதீனம் தலைமை தாங்கினார். அப்போது நித்யானந்தா ஆசிரமக் கொடியை திறந்து வைத்து உரையாற்றினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தியாக பீடம் மதுரை நகர மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. தியான பீடத்தில் யோகா, தியானம் போன்ற வகுப்புகள் நடத்தப்படும். விரைவில் திருப்பரங்குன்றத்தில் நித்யானந்தா ஆசிரமம் தொடங்கப்படும். மேலும் அங்கு 100 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையும் அமைக்கப்படும். இந்த மருத்துவமனை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஆசிரமம் சார்பில் ரூ. 96 லட்சத்தை நிவாரண தொகையாக வழங்கி உள்ளோம். 151 நாடுகளில் தீட்சிதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1,500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர்.
நான் ஆசிரமத்தில் இருந்தே பொது பிரச்சனைக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இரு மாநில பிரச்சனை என்றாலே அது தேசியமயமாக்கப்பட வேண்டும். ஏனென்றால் உணர்வுகளைத் தூண்டி நாட்டை துண்டாக்க இடம் கொடுக்கக் கூடாது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக நான் விரைவில் போராடுவேன். அது எந்த மாதிரியான போராட்டம் என்று பின்பு அறிவிக்கப்படும் என்றார்.