பசுபதி பாண்டியன் கொலை-பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு, கல்வீச்சு, மறியல்
திண்டுக்கல்: தலித் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. தென் மாவட்டங்கள் பலவற்றிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நேற்று இரவு திண்டுக்கலில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல்லில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்களும் நிறுத்தப்பட்டன.
இன்றும் கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது. நகர் முழுவதும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்கள் எதுவும் ஓடவில்லை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
பதட்டம் நீடிப்பதால் திண்டுக்கலில் சில தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்து பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவியர் வந்து திரும்பிச் சென்றனர்.
மதுரையில் கல்வீச்சு
மதுரையில் ஐந்து பஸ்கள் மீது சிலர் கல்வீசித் தாக்கியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை உள்பட சிவகங்கை மாவட்டப் பகுதிகளிலும் பஸ்கள் ஓடவில்லை.
ராஜபாளையத்திலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பசுபதி பாண்டியனின் சொந்த ஊரான தூத்துக்குடியிலும் பதட்டம் நிலவுகிறது. அங்கும் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
வன்முறை மூளாமல் தடுக்க போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் அனைத்து தென் மாவட்டங்களிலும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
திண்டுக்கல் - மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் 8 மணி முதல் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறு.
பசுபதி பாண்டியனைக் கொலை செய்த எதிரிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் சடலத்தை பொது மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திண்டுக்கல் மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி அருகே முருகத்தூரான்பட்டி என்ற இடத்தில் பொது மக்கள் சாலை மறியலில் குதித்தனர். இதனால் இரு மருங்கிலும் வாகனப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை
மதுரை, சிவகங்கை, ராம்நாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பஸ்கள் ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவுக்குப் பஸ் போகவில்லை
செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு அரசு பஸ்கள் சென்று வந்த நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications