வடகிழக்கு பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி
பெஷாவர்: வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மார்க்கெட் ஒன்றில் குண்டுவெடித்ததில் 35 பேர் பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதி தாலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம் உள்ள இடம். வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் மார்க்கெட். அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
நேற்று அந்த மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் இருந்த குண்டு வெடித்ததில் 35 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர். ரிமோட் மூலம் அந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடித்த டிரக்கில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் கைபர்-பக்டுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பால் அருகில் இருந்த பெட்ரோல் பம்பும், பல வாகனங்களும் சேமடைந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது தாலிபான்களுக்கு எதிரான தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த மார்க்கெட் வழியாக சென்றனர் என்று கூறப்படுகின்றது.
அண்மையில் தான் தங்கள் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தப்போவதாக தெஹ்ரிக்-இ-தாலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியாகியுள்ளதாகவும், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications