தொடங்கியது தேமுதிக தேர்தல் 'திருவிழா': பதவியைப் பிடிக்க போட்டா போட்டி!
தேமுதிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தேமுதிகவின் முதல் அமைப்பு தேர்தல் கடந்த 21ம் தேதி மாநிலம் முழுவதும் துவங்கியது.
முதல் கட்டமாக கிராமப்புற நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் துவங்கியுள்ளது. பல்வேறு நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் இந்த தேர்தல்கள் அடுத்த மாதம் 13ம் தேதி வரை 5 கட்டங்களாக நடக்கிறது. வழக்கமாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் அமைப்பு தேர்தல் நடக்கும்போது முக்கியப் பதவிகளைப் பிடிக்க கட்சியினர் இடையே அடிதடி எல்லாம் கூட ஏற்படும்.
இந்நிலையில் தேமுதிகவிலும் ஒன்றியம், பேரூராட்சி, நகரம், வட்டம், வார்டு செயலாளர் உள்ளிட்ட பதவிகளைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் இந்த கட்சியினரும் அடிதடியில் இறங்குவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க அக்கட்சியின் தலைவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
பதவிக்காக யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பதவிகளைக் கொடுக்க பணம் பெற்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.