முல்லைப் பெரியாறு பிரச்சனை: பேசித் தீத்துக்கலாமே- உம்மன் சாண்டி யோசனை
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே கேரளா விரும்புவதாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நேற்று குடியரசு தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது,
கேரளாவில் சமீபகாலமாக மத ஒற்றுமையை சீர்குலைக்கும் சில சம்பவங்கள் நடந்து வருவது வருத்தம் அளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 3 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த மக்களின் நலன் கருதி முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு்க்கு தண்ணீர் கொடுப்பதுடன் கேரளாவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது தான் நமது அணுகுமுறை.
தமிழ்நாட்டுடன் கேரளாவுக்கு சுமூக உறவு உள்ளது. இந்த உறவை தக்க வைத்துக் கொண்டு முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே கேரள விரும்புகிறது என்றார்.