என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்
அமைச்சரவையில் நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதா சில மாற்றங்களைச் செய்தார். அமைச்சர்களாக இருந்து வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இருவரும் சசிகலா ஆதரவாளர்கள்.
இவர்களுக்குப் பதில் புதிய அமைச்சர்களாக சிவபதியும், முக்கூர் சுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சிவபதி பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல முக்கூர் சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
சேர்க்கப்பட்டுள்ள இரு புதிய அமைச்சர்களும் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா, பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், சபாநாயகர் ஜெயக்குமார், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் - சிறு குறிப்பு
என்.ஆர்.சிவபதி
என்.ஆர்.சிவபதி 1963-ல் பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஜெயசாந்தி, லட்சுமிபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
1991 முதல் 96 வரை இவர் எம்.எல்.ஏவாக இருந்தார். தற்போது முசிறி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு மே 16ம் தேதி இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது மீண்டும் அமைச்சராகியுள்ளார். ஒரே ஆட்சிக்காலத்தில் 2 முறை அமைச்சராகப் பொறுப்பேற்று புது சாதனை படைத்துள்ளார்.
இவருடைய இமெயில் முகவரி- [email protected]
முக்கூர் சுப்பிரமணியன்
1959ம் ஆண்டு முக்கூர் கிராமத்தில் பிறந்தவர். பி.ஏ. படித்துள்ள இவரது அடிப்படைத் தொழில் விவசாயம். 2001ம் ஆண்டு முதல் 2006 வரை முக்கூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
சுப்பிரமணியன், செய்யார் தொகுதி அதிமுக உறுப்பினர் ஆவார்.
இவருடைய இமெயில் முகவரி- [email protected]