விஞ்ஞானிகள் என்ன குப்பைகளா?-அமைச்சர் நாராயணசாமி பேச்சுக்கு சி.என்.ஆர். ராவ் கண்டனம்

மாதவன் நாயர் மீதான விமர்சனம் தவறானது. குப்பையைத் தூக்கி வீசுவதுபோல, விஞ்ஞானிகளை இந்த அரசு நடத்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பது சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ள் கருத்து.
தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் எஸ் பாண்ட் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இது குறித்து 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்று மாதவன் நாயர் உள்ளிட்டோர் அரசுப் பணிகளில் இருக்க தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, "எந்த ஒரு தவறையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கடுமையான செய்தியை விஞ்ஞானிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது'' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராவ், நிறுவனம் குப்பையைத் தூக்கி வீசுவதுபோல, இஸ்ரோவில் பணியாற்றி நாட்டுக்கு நீண்ட காலமாக சேவை செய்தவர்களை அரசு நடத்துகிறது என்றார்.
மேலும் ஊழல் அரசியல்வாதிகளை இது போன்று நடத்துவதில்லை. விஞ்ஞானிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? இது போன்று நடத்தினால், இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் பணியாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்றார். மத்திய நாராயணசாமி தமது அடிப்படைக் கல்வியை எங்கு கற்றார் என்று தெரியவில்லை என்றும் சி.என்.ஆர். ராவ் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications