புதிய ஜே.வி.பியில் முன்னாள் விடுதலைப் புலிகள்?
கொழும்பு: இலங்கை இடதுசாரி இயக்கமான ஜே.வி.பியின் புதிய குழுவுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவது அதிகரித்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் 1940 மற்றும் 50களில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தது. சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வந்தனர். பேரினவாத சிந்தனை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட காலத்தில் வலதுசாரி அரசியல் கட்சிகளான சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்றவையே தீர்மானிக்கும் அரசியல் சக்திகளாக வலம் வந்தன.
இருப்பினும் 1960களில் உதயமான இடதுசாரி ஆயுத இயக்கமான ஜே.வி.பி இலங்கை அரசியல் கட்சிகளுக்கு பிரதான எதிரியாக இருந்தது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை கைப்பற்றி இடதுசாரி சித்தாந்த நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஜே.வி.பி பயணித்தது.
பின்னர் பேரினவாதம் பேசி இலங்கை இனப்படுகொலை வரலாற்றில் முக்கியத்துவம் வகித்தது. ஜே.வி.பி.யின் ஆயுதப் பயணம் முடிவுக்கு வந்து வாக்கு வங்கி அரசியலுக்குள் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறது
மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கியப் பங்காற்றிய ஜே.வி.பி, கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்த பிளவுகளை சந்தித்தது.
ஏற்கெனவே விமல் வீரவன்ச தலைமையிலான ஒரு குழு மகிந்த ராஜபக்சவுடன் ஐக்கியமாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்சவுக்கு எதிராக கிளர்ச்சிக் குழு ஒன்று உருவெடுத்தது.
நாடாளுமன்ற அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தது தவறு என்ற வாதத்தை முன்வைத்து கிளர்ச்சியின் மூலமே அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று புதிய ஜே.வி.பி. பிரகடனம் செய்து வருகிறது. இந்த புதிய ஜே.வி.பி.யுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணந்து வருவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்ச இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
புதிய ஜே.வி.பி. குழுவும் "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து செயல்படுவது உண்மைதான் என ஒப்புக் கொள்வதாக" அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் புதிய ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் புதிய ஜே.வி.பி.யின் ஆதரவாளர்களான வீரராஜு மற்றும் முருகானந்தம் ஆகியோர் திடீரென காணாமல் போயுள்ளனர். ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாலேயே இருவரும் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தைக் கைப்பற்ற ரோக விஜவீர தலைமையிலான ஜே.வி.பி. முயன்று பல ஆயிரம் இளைஞர்களை பலி கொடுத்த வரலாறும் இலங்கையில் நடந்தேறியிருக்கிறது.
இலங்கை அரசியலில் புதிய ஜே.வி.பியும் முன்னாள் புலிகளும் கை கோர்க்கும் அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது வரலாற்றுக்கே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications