போலீசுக்கு லஞ்சம்: லண்டனில் சன் நாளிதழ் பத்திரிக்கையாளர்கள் 4 பேர் கைது
லண்டன்: போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் தி சன் நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் உள்பட 4 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் லண்டனி்ல் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் தி சன் நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் கிரஹாம் டட்மேன்(48), எக்ஸிகியூட்டிவ் எடிட்டர் பெர்கஸ் ஷானஹான்(56), செய்தி பிரிவுத் தலைவர் கிறிஸ் பாரோ(42), கிரைம் எடிட்டர் மைக் சுல்லிவன்(42) மற்றும் 29 வயது போலீஸ் அதிகாரி ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் அந்த 4 பத்திரிக்கையாளர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றத்திற்காக கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நியூஸ் இன்டர்நேஷனலின் முன்னாள் தலைவர் ரெபக்கா புரூக்குஸுடன் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெபக்கா 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தி சன் நாளிதழின் ஆசிரியராக இருந்தபோது ஷானஹான் துணை ஆசிரியராக இருந்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு கிரஹாமிற்கு துணை ஆசிரியர் பதவியில் இருந்து நிர்வாக ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்தவர் ரெபக்கா. அதே போன்று கடந்த 2007ம் ஆண்டு கிறிஸ் பாரோவை நியூஸ் எடிட்டரில் இருந்து செய்தி பிரிவு எடிட்டர் ஆக்கியதும் ரெபக்கா தான்.
நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications