இன்று முதல் மீண்டும் 'தனிக்குடித்தனம்'-சட்டசபையில் என்ன செய்யப் போகிறது தேமுதிக?
தேமுதிக, யாருடனும் சேராமல் தனியாக இயங்கி வந்தபோது மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்று சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் எப்போது கூட்டணி அரசியலில் நுழைந்ததோ அன்றே அதன் செயல்பாடுகள் குலைந்து போய் விட்டன. தற்போது தேமுதிகதான் தமிழகத்தின் எதிர்க்கட்சியாகும். ஆனால் அதன் செயல்பாடுகள் பல முக்கியப் பிரச்சினைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. இதனால் மக்கள் மத்தியில் தேமுதிக மீதான அவ நம்பிக்கை அதிகரித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் கூட்டணி நாளடைவில் முறிந்து போய் விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கேட்ட இடங்களைக் கொடுக்க அதிமுக தயாராக இல்லாததால், தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியது தேமுதிக.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சித்துப் பேசி வருகிறார் விஜயகாந்த். இந்த நிலையில் இன்று சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தில் தேமுதிக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இருந்தபோதே தேமுதிக எம்.எல்.ஏக்களை அதிமுகவினர் வித்தியாசமாகத்தான் பார்த்து வந்தனர். சட்டசபையில் முன்பு ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. பேசுகையில், தேமுதிக எங்களுக்குப் பாடம் நடத்தக் கூடாது என்று பகிரங்கமாக கண்டித்தார் முதல்வர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போதாவது தேமுதிகவினர் ஆக்கப்பூர்வமாக பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார், என்ன பேசப் போகிறார், எப்படிப் பேசப் போகிறார்,முக்கியப் பிரச்சினைகளில் அவர் அணுகப் போவது எப்படி என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
தேமுதிக தனித்து விடப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், சிபிஎம் எம்.எல்.ஏக்கள் துணை நிற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தேவைப்பட்டால் சிபிஐ எம்.எல்.ஏக்களும் கூட துணைக்கு வருவார்கள். தங்களுக்குப் பயன்படுவதாக இருந்தால் திமுகவும் கூட தேமுதிகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.