வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குகிறது சீனா!
இந்தியாவில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த தீவிரவாத அமைப்புகளை தூண்டிவிடும் பாகிஸ்தான் பாணியை சீனாவும் பின்பற்றுகிறது.
நாகாலாந்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பின் 2 குழுக்களுக்குமே சீனா ஆயுதங்களை வழக்கி அவர்கள் பயிற்சி பெறுவதற்கான முகாம்கள் அமைக்கவும் அனுமதித்துள்ளது.
இதேபோல் அசாமில் ஆயுதமேந்தி போராடும் உல்பா தீவிரவாத அமைப்பு வங்கதேசத்தில் முகாம் அமைத்திருந்தது. தற்போது மியான்மர் எல்லைக்கு மாற்றிக் கொண்டுள்ளது.
வடகிழக்கு மாநில ஆயுதக் குழுக்கள் பலவும் வங்கதேசத்தில் முகாம் அமைத்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தன. அண்மைக்காலமாக வங்கதேசத்தில் இந்திய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் பர்மா எல்லைக்கு பல மாறிவிட்டன.
வடகிழக்கில் மற்றும் ஒரு அபாயகரமான போக்கு வளர்ந்து வருவதையும் மத்திய உள்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது.
நாகாலாந்தின் சமவெளிப்பகுதியான திமாப்பூர்தான் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் சிறு தீவிரவாதக் குழுக்களுக்கான ஆயுத பரிவர்த்தனை மையமாகவும் உருவெடுத்து வருகிறது.
உல்பா, நாகாலாந்து தீவிரவாத அமைப்புகள் போன்ற பெரிய இயக்கங்களே மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் இயங்கும் சிறு குழுக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்து வருவதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.