புனே: போக்குவரத்து போலீசாரைத் தாக்கிய ராணுவ அதிகாரிகள், காவல் நிலையம் சூறையாடல்
புனே: புனேயில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீசாருக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் நேற்று மாலை பைக்கில் சென்றனர். அவர்கள் நோ என்ட்ரி பகுதி வழியாக சென்றபோது அவர்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராத ரசீது கொடுக்க முயன்றனர். இதையடுத்து ராணுவ அதிகாரிகள் போலீசாருடன் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றி அவர்கள் போக்குவரத்து போலீசாரைத் தாக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு போலீஸ் குழு வர 30 முதல் 40 ராணுவ அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தாக்கியதுடன் போலீசாரையும் தாக்கினர். தாக்கப்பட்ட போலீசாரில் 2 பெண் ஏட்டுகளும் அடக்கம். மேலும் அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள், சண்டையைத் தடுக்க வந்த பொது மக்களையும் ராணுவ அதிகாரிகள் தாக்கினர்.
பத்திரிக்கையாளர்கள் வைத்திருந்த கேமராக்களைப் பிடுங்கி உடைத்தனர். ராணுவம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகே பிரச்சனை தீர்ந்தது. தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வருவார்கள் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ராணுவ கல்லூரி அதிகாரிகள் போக்குவரத்து ஏட்டுகளைத் தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை கமிஷனர் சஞ்சய் ஜாதவ் தெரிவித்தார்.
இது போன்ற ஒழுங்கீனச் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தெரிவித்தார்.