ரூ.1 கோடி மோசடி வழக்கில் ராவணன் மீண்டும் கைது: கூட்டாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு
சென்னை: கோவையைச் சேர்ந்த கான்டிராக்டர் ரவிக்குமாரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகியுள்ள சசிகலாவின் உறவினர் ராவணன் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்துத் தருவாகக் கூறி தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் உறவினரான ராவணன் கோவை காரமடையைச் சேர்ந்த கான்டிராக்டர் ரவிக்குமார் என்பவரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மணல் குவாரியை குத்தகைக்கு வாங்கித் தருவதாகக் கூறி திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.1 கோடி பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மோசடி வழக்கிலும் ராவணனை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கிலும் அவரை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படு்ததி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வாரண்டு தொடர்பான மனு நேற்று மாலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது தான் ராவணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து உத்தரவிடப்படும்.
நீதிமன்றம் உத்தரவிட்டதும் அவரை ஆஜர்படுத்தவிருக்கின்றனர். அதன் பிறகு 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும் விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த சத்யா என்பவர் நெய்வேலியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவர் தான் தொழில் ரீதியாக பழக்கமுள்ள கிருஷ்ணமூர்த்தியை ராவணனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் பேச்சை நம்பியே கிருஷ்ணமூர்த்தி ராவணனிடம் ரூ.1 கோடி கொடுத்துள்ளார். இதற்கு ராவணனின் உதவியாளர் ராஜா என்பவரும் உடந்தை.
இதையடுத்து சத்யா, ராஜா ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினமே விசாரணைக்கு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அவர் விசாரணைக்கு வரவில்லை. ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த வழக்கு குறித்த சில சாட்சிகளை அழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் இன்று அல்லது நாளை போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவரிடம் சத்யா, ராஜா குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் செல்வராஜ் விபத்து வழக்கிலும் ராவணனை கைது செய்ய போலீசார் முனைப்பாக உள்ளனர். இந்த வழக்கில் டிரைவர் மணிராஜ் கொடுத்த தகவல்கள் முக்கியமானவை என்று கூறப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணையின்போது டிரைவர் மணிராஜ் முதலில் வேன் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச்சுவற்றில் மோதியதாக தெரிவித்தார். அதன் பின்னர் எதிரே ஒரு வாகனம் மின்னல் வேகத்தில் வந்தது என்றும், அதன் மீது மோதாமல் இருக்க வேனைத் திருப்பியபோது அது தடுப்புச்சுவற்றில் மோதியது என்று கூறியுள்ளார்.
எதிரே வந்த வாகனம் யாருடையது, அதை இயக்கச் சொன்னது யார் என்பது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் இறுதியில் இந்த சம்பவத்திற்கு ராவணனின் தூண்டுதல் தான் காரணம் என்பது உறுதியானால் செல்வராஜ் விபத்து வழ்ககு கொலை வழக்காக மாற்றப்படும். இதற்கு காரணமான ராவணன் மற்றும் பிறர் கைதாவார்கள்.












Click it and Unblock the Notifications