சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்..சங்கரன்கோவிலில் முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெ.!
எப்படி திமுகவுக்கு திருமங்கலம் இடைத் தேர்தல் ஒரு அடையாளமாக மாறியதா அதேபோல சங்கரன்கோவில் இடைத் தேர்தலும் பல விதங்களில் அதிமுகவுக்கு மறக்க முடியாத நிகழ்வாக மாறியுள்ளது.
திராணி இருந்தால் ஒண்டிக்கு ஒண்டி நிற்கத் தயாரா என்று சட்டசபையில் விஜயகாந்த்தைதப் பார்த்து நேருக்கு நேர் கேட்ட ஜெயலலிதா, நாங்கள் நிற்கப் போகிறோம், வெல்லப் போகிறோம், வரலாறு பார்க்கப் போகிறது என்றும் ஆவேசமாக முழங்கினார்.
ஆனால் பதிலுக்கு படு ஆவேசமாக முழங்கியிருக்க வேண்டிய விஜயகாந்த், ஆளுநர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்கள், பார்க்கலாம் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் சங்கரன்கோவிலை எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் அதிமுகவினர் களப் பணிகளில் குதித்து விட்டனர். ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பூர்வாங்க வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அம்மாவே கிளம்பி பிரசாரத்திற்கு வரப் போவதாக சங்கரன்கோவில் முழுவதும் இன்று பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
இதற்குக் காரணம் சங்கரன்கோவிலுக்கு வந்துள்ள அமைச்சர்கள் குழு. மாநில நிதியமைச்சரும், அதிமுக பொருளாளருமான ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செந்தூர்ப்பாண்டியன் ஆகியோர் சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளனர்.
மக்கள் சந்திப்பு என்று இந்த வருகைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் பிரசாரத்தைத் திட்டமிடும் நோக்கில்தான் மூவரும் வந்துள்ளதாக அதிமுகவினரே கூறுகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய மூன்று யூனியன்கள் உள்ளன. இவற்றை இந்த அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யவுள்ளதாம். எங்கு பிரசாரம் செய்யலாம், எந்தெந்த ஊர் வழியாக பிரசாரப் பயணத்தை மேற்கொள்வது என்பது குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளதாம்.
விரைவில் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணம் விரிவாக அறிவிக்கப்படும் என்றும் முதல் கட்டமாக சூறாவளிப் பயணம் மேற்கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும், தொகுதி முழுவதையும் அவர் தீவிரமாக சுற்றி வந்து பிரசாரம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் சங்கரன்கோவில் தொகுதி அதிமுகவினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.
ஆட்சியருடன் ஆலோசனை
பின்னர் நெல்லை சென்ற அமைச்சர்கள் குழு அங்கு ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சங்கரன்கோவில் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்குவது குறித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் நகராட்சித் தலைவர் முத்துலட்சுமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.