பட்ஜெட்டால் தூக்கம் போச்...-புலம்பும் பிரணாப் முகர்ஜி!
அடுத்த மாதம் 16-ந் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிரணாப் முகர்ஜி. பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை, நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிதிப் பற்றாக்குறை 5.6 சதவீதமாகியுள்ளது.
மத்திய அரசு பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று பொது வினியோக முறை, உணவுக்கிடங்கு பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பட்ஜெட்டுக்குப் பொறுப்பான நிதியமைச்சர் என்ற முறையில் மானியங்களுக்காக மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். இதனால் என் தூக்கமே போய்விட்டது. நம்புங்க... இதில் சந்தேகமே வேண்டாம். மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.34 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட மேலும் ரூ.1 லட்சம் கோடி அதிகமாக ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.
உணவு பாதுகாப்பை பொறுத்தமட்டில், பிரச்சினைகள், தடைகளுக்கு மத்தியில் மக்களின் தேவைகளை சந்திக்கிற அளவுக்கு செயல்படுத்தத்தக்க திட்டத்தை வகுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன நிலையில் மக்கள் இனியும் காத்திருக்க தயாராக இல்லை. அவர்கள் அதிகாரம் வழங்கப்படுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அதிகாரம் வழங்கல் என்பது திட்டக்குழுவின் ஆவணங்களில் அல்ல. ஆளும் வர்க்கத்தினரின் வாக்குறுதியில் அல்ல. சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்படி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதுதான் உணவு பாதுகாப்பு மசோதாவை நாம் பெற்றிருப்பதின் விவேகம் ஆகும்.
பணவீக்கத்தினால் சமூகத்தின் ஒரு தரப்பு மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறபோது, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனைத்தும் பொது வினியோக முறையின் கீழ் வழங்கப்படவேண்டும். பொது வினியோக திட்டத்தின்கீழ் மானிய விலையில் பொருட்களை வாங்குகிற 18 கோடி மக்கள் நமது நாட்டில் இருக்கின்றனர். 120 கோடி இந்தியர்களின் உணவுத்தேவையை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு, விவசாயத்துறையில் பெருமளவு முதலீடு தேவைப்படுகிறது.
எத்தனையோ விமர்சனங்களுக்கு அப்பால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கிராமப்புறங்களில் நிச்சயிக்கப்பட்ட கூலியை உறுதி செய்திருக்கிறது," என்றார்.