கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கப்போகிறாரா தாடி பாலாஜி.. லட்சிய ஜனநாயக கட்சியிலிருந்து விலகல்
சென்னை: லட்சிய ஜனநாயக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகுவதாக நடிகர் தாடி பாலாஜி அறிவித்துள்ளார். அவர் மீண்டும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். நடிகர் விஜயுடன் திரைப்படங்களில் நடித்த நடிகர் தாடி பாலாஜி அவர் கட்சி தொடங்கியதும் அதில் இணைந்தார். அதன்பிறகு நடிகர் விஜயின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்தினார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

தாடி பாலாஜிக்கு கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், அவர் கடந்த ஆண்டு தவெகவில் இருந்து விலகி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். தான் தவெக கட்சியில் இருந்து விலகியதற்கு தவெகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் தன்னை விஜய் அருகில் கூட நெருங்க விடவில்லை என்றும், விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் சொல்லியிருப்பேன் என்றும் கூறினார்.
லட்சிய ஜனநாயகக் கட்சியின் பரப்புரை பொதுச் செயலாளராக நடிகர் தாடி பாலாஜி நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 1 இடத்தில் வென்றார்.
இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி, லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். எனினும், அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அவர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் மீண்டும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
1997ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ், சுஹாசினி நடிப்பில் வெளியான நந்தினி படத்தில் டிரைவராக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தாடி பாலாஜி. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். வடிவேலு, விவேக் ஆகியோருடன் சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளார்.
திமுக ஆதரவாளராக இருந்து வந்த நடிகர் தாடி பாலாஜி, விஜய் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதும், அதில் சேர்ந்தார். விக்கிரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார். விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டார். ஆனால், கட்சியில் பலருக்கும் முக்கிய பதவிகளை கொடுத்த விஜய், தாடி பாலாஜியை கண்டுகொள்ளவில்லை.
இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்த தாடி பாலாஜி, கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை விமர்சித்து வந்தார். கரூர் சம்பவம் தொடர்பாகவும் தவெக நிர்வாகிகளை விமர்சித்திருந்தார். விஜய் உடன் இருப்பவர்கள் அவரை தவறாக இயக்குவதாக குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார்.












Click it and Unblock the Notifications