உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவில் மந்தம்
லக்னெள: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப் பதிவில் மந்த நிலையே நீடித்தது.
காலையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் நின்றிருந்தனர். பிற்பகலில் 34 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருந்தன.
முதல் கட்ட தேர்தலில் 62 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 2-ம் கட்டத்தில் இந்த சதவீதம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தொகுதிகள் நிலவரம்
9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது தேர்தல் நடைபெறும் ஆஸம்கார், மெள, பாலியா, காசிப்பூர் உள்ளிட்ட பல தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களால் நிறைந்தது. இவர்களைக் குறிவைத்தே ரூ3 ஆயிரம் கோடியிலான நெசவாளர் நலத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதேபோல் டெல்லி என்கவுண்டரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட விவகாரம், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு போன்றவற்றை காங்கிரஸ் முன்வைத்ததும் இவர்களய் இலக்கு வைத்துதான்.
இதேபோல் சமாஜ்வாதி கட்சியும் முஸ்லிம்களின் காவலராக தம்மை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தொடர்புடைய கல்யாண்சிங்குடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் கூட்டணி வைத்திருந்ததால் பாரம்பரியான முஸ்லிம் வாக்கு வங்கியை இழக்க நேரிட்டது. இம்முறை முஸ்லிம் வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமாஜ்வாதி முனைப்பு காட்டுகிறது. "மெளலானா முலாயம்" என்று நட்போடு முஸ்லிம்கள் அழைத்த நிலையை உருவாக்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.
தற்போதைய தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கணிசமான அளவுக்கு தலித்துகள் இருப்பது தங்களுக்கு கை கொடுக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கணக்குப் போட்டுள்ளது. மாயாவதி அறிவித்த பூர்வாஞ்சல் மாநிலம் இந்தப் பகுதியில் அமைவதும் தங்களுக்கு சாதகம் என்கிறது பகுஜன் சமாஜ்.