நம்பிக்கை வைத்திருந்தோரை நசீத் ஏமாற்றிவிட்டார்: புதிய அதிபர்
மாலே: மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத் தம் மீது நம்பிக்கை வைத்திருந்தோரை ஏமாற்றிவிட்டார் என்று புதிய அதிபர் முகது வகீத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மாலத்தீவில் விரைவில் அமைதி திரும்ப 2 மாதத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் நசீத் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இத்தகைய பேச்சு நாட்டில் அசாதாரண நிலைமையையே உருவாக்கும்.
ஒரு பொறுப்புமிக்க தலைவராக நசீத் செயல்பட வேண்டும்.
2008-ம் ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக உருவான பல வாய்ப்புகளை நசீத் நிராகரித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் மற்ற கட்சிகளை இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்க நசீத் முயற்சித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான நிலையில் தன்னிச்சையாகவே செயல்பட முடிவெடுத்டு அரசாங்கத்தை அமைத்தார்.
நசீத் மீது நம்பிக்கை கொண்டிருந்த அனைவரையும் அவர் ஏமாற்றிவிட்டார் என்றார் வகீத்.
இதனிடையே ஐ.நாவி.ன் சிறப்புத் தூதராக மாலத்தீவு தலைநகர் மாலே சென்றுள்ள ஆஸ்கர் பெர்னாண்டஸ், புதிய அதிபர் வகீத்தை நேற்று சந்தித்துப் பேசினார்.
முன்னாள் அதிபர் நசீத்தை ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தக் கூடும்.
இதேபோல் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி கணபதியை மாலத்தீவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சிறப்புத் தூதராக அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் மாலத்தீவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.