விஜயகாந்த் வீட்டு சுவரில் போஸ்டர் ஒட்டிய தகராறு-போலீஸ் பாதுகாப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுச் சுவற்றில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து தேமுதிகவினர் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து வீட்டுக்குப் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு திரண்டு வந்த அதிமுகவினர் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதையடுத்து அவர்களுடன் தேமுதிகவினர் மோதினர். இரு தரப்பினரும் கடும் கைகலப்பில் இறங்கினர்.
இதுகுறித்து இரு தரப்பிலும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. ஆனால் வழக்கு எதையும் போலீஸார் பதிவு செய்யவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. புகார்களைப் பெற்றுக் கொண்டு போலீஸார் 'கம்'மென்று உள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸாரை நிறுத்தியுள்ளனர். 5 போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மறுபடியம் பஞ்சாயத்தாகி விடக் கூடாது என்பதற்காக இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனராம்.