சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை முடிவெடுக்கிறது சிபிஎம்
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து நாளை நாகையில் நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்து விட்டன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இடதுசாரி கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தலுக்குப் பின் இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும், சிபிஎம்மும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன.
தற்போது சங்கரன்கோவிலில் என்ன நிலைப்பாட்டில் இந்தக் கட்சிகள் உள்ளன என்பது தெரியவி்ல்லை. தேர்தலில் போட்டியிடுவது டைம் வேஸ்ட் என்று ஏற்கனவே சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இருப்பினும் தேர்தலைப் புறக்கணிப்பதை சிபிஎம் ஏற்காது என்று தெரிகிறது.
எனவே ஒன்று அக்கட்சி போட்டியிடும் அல்லது யாருக்காவது ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,
மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு, நாகப்பட்டினத்தில் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை, மக்கள் பிரச்னை, எதிர்கால அரசியல் குறித்து விவாதிக்கப்படும்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வரும் 22ம் தேதி நடைபெறும் மாநாட்டில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கூடும். அப்போது இது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
நில அபகரிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். முதல்வருக்கு நெருக்கமானவர்கள் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அது உள்கட்சி விவகாரமாக இருந்தாலும் அதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.