சிறைக்காவலரைக் கொல்ல முயன்றதாக கே.என்.நேரு மீது திடீர் வழக்கு-பூண்டி கலைவாணன் மறுடியும் கைது
திருச்சி: திருச்சி மத்திய சிறைக் காவலரை கொலை செய்ய முயன்றதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நடந்த தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை பார்ப்பதற்காக திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு உள்பட சிலர் நேற்று காலை திருச்சி மத்திய சிறைக்கு காரில் சென்றனர்.
மத்திய சிறைச்சாலை வளாகத்தின் உள்பகுதிக்குள் அவர்களது கார் நுழைந்ததும் சிறைக் காவலர்கள் காரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் சிறைக் காவலர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றி தள்ளு முள்ளும் நடந்தது. அதன்பின்னர் நேருவை மட்டும் உள்ளே செல்ல சிறைக்காவலர்கள் அனுமதித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய சிறைச்சாலை ஜெயிலர் செந்தாமரைக்கண்ணன் கே.கே.நகர் போலீசில் நேற்று மாலை ஒரு புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நேரு, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன், தி.மு.க. பிரமுகர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மற்றும் சிலர் மீது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில் போலீசார் தில்லை நகர் 5-வது கிராசில் உள்ள கே.என்.நேருவின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு இருந்த நேருவின் காரை எங்களிடம் ஒப்படையுங்கள், விசாரணைக்கு தேவைப்படுகிறது என கேட்டனர்.
பின்னர் அந்த கார் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட நேரு உள்பட அனைவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிறைக்காவலர் வீரமணி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு காரணமாக திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி.கலைவாணனை திருவாரூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பூண்டி கலைவாணன் ஏற்கனவே அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ்னில் வெளியே வந்தவர் ஆவார். இந்த நிலையில் மறுபடியும் அவரை குறி வைத்து போலீஸார் கைது செய்திரு்பபதால் திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
கைது குறித்து கலைவாணன் கூறுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளால் திமுகவினரை சேர்வடையச் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications